வெள்ளி, 28 மார்ச், 2014

பொடுகை விரட்டும் கூந்தல் தைலம்

கார்மேகக் கூந்தலுடன் உலாவர விரும்புகிறவர்களுக்கு கரிசலாங்கண்ணி சாறு தைலம், ஒரு வரப்பிரசாதம்! கரிசலாங்கண்ணி இலையை இடித்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். 

இந்தச் சாறு - 3 கப், 
கீழா நெல்லி இலைச்சாறு - 1கப், 
பொன்னாங்கண்ணி இலைச்சாறு - 1கப், 
எலுமிச்சை சாறு - 1 கப்... 

இவற்றை 6 கப் நல்லெண்ணெயுடன் கலந்து அரை மணி நேரம் அடுப்பில் வையுங்கள். `சட சட' வென்ற ஓசை அடங்கி, தைல பதத்தில் வந்ததும், காயவைத்த நெல்லிக்காய் பவுடர் - 10 கிராமை இதில் போடுங்கள் பிறகு, அடுப்பை அனைத்து விடுங்கள். 

இந்த தைலத்தை தினமும் தலையில் தேய்த்து வர, முடி `கரு கரு'வென்று வளரத் தொடங்கும். பேன் மற்றும் பொடுகினால் அவதிப்படுகிறவர்களுக்கான ஸ்பெஷல் கரிசலாங்கண்ணி தைலம் இது. 

பச்சை கரிசலாங்கண்ணி இலை இடித்த சாறு - 2கப், 
அருகம்புல் சாறு - 2 கப், 
தேங்காய் எண்ணெய் - 2கப்.. 

இவற்றுடன் 1 கப் தேங்காய்ப் பால் கலந்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து சூடு பண்ணுங்கள். நீர்ப்பதம் போய், தைல பதத்தில் வந்ததும் இறக்கி விடுங்கள். தினமும் தலைக்கு எண்ணெய்க்கு பதிலாக இந்த தைலத்தை தேய்த்து வாருங்கள். 

இது பொடுகையும் பேனையும் ஓட ஓட விரட்டியடிப்பதால், தலை சூப்பர் சுத்தமாகிவிடும்.

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை மறைய செய்யும் ஓட்ஸ்

அழகு நிலையம் செல்லாமல், வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே முகத்தில் கரும்புள்ளிகளை நீக்கி எழில் பெறலாம். அதற்கான குறிப்புகள் இதோ... 


* உருளைக்கிழங்கை நறுக்கி அதனை முகத்தில் 15 நிமிடம் தேய்த்த பின்னர் காயவைத்து, குளிர்ந்த நீரில் கழுவிடவேண்டும். இதனால் கரும்புள்ளிகள் படிப்படியாக நீங்கிவிடும். 

* வெந்தயக் கீரையை நன்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின் அதனை முகத்தில் தடவி, சிறிதுநேரம் காயவைத்து, பிறகு கழுவவேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், விரைவில் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கிவிடும். 

* கொத்தமல்லியுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து பசை போல் முகத்தில் தடவி காயவைத்து கழுவி வந்தால் கரும்புள்ளிகள் மறையும். இதை வாரம் இருமுறை செய்யலாம். 

* எலுமிச்சைச் சாற்றுடன் சர்க்கரையைச் சேர்த்துக் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் 'மசாஜ்' செய்ய வேண்டும் இதனால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்குவதோடு, சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் வெளியேறி, சருமம் 'பளிச்'சென்று ஆகும். 

* கரும்புள்ளியை நீக்க சிறந்த ஒரு வீட்டு மருந்தாக, ஓட்ஸை பொடிசெய்து, பன்னீருடன் கலந்து முகத்துக்குத் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின்னர் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். 

* இரண்டு டேபிள் ஸ்பூன் தயிரை, ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சைச் சாற்றுடன் கலந்து தடவிவந்தால், கரும்புள்ளிகள் சீக்கிரம்போய் விடும். 

* தக்காளியை கூழாக்கி, கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்துப் பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால், கரும்புள்ளிகளை நீக்கி விடலாம். 

* பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து, அதனை முகத்தில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்துப் பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால் கரும்புள்ளிகள் காணாமல்போய்விடும்.